சண்டிகர்: அரசு ஊழியர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து பஞ்சாப் மாநில அரசு, வெள்ளிக்கிழமை, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளது. நாட்டில், பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்கும் நான்காவது மாநிலமாக பஞ்சாப் உருவாகியுள்ளது.
பஞ்சாப் மாநில அமைச்சரவை இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக மாநில முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஒன்று அதன் ஊழியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. உங்களது அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாம் எப்போதும் நமது ஊழியர்கள் பக்கமாக இருப்போம். உறுதியளித்தோம். நிறைவேற்றுகிறோம். நாங்கள் சொல்வதை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.