சென்னை: விதியின் விந்தையைப் பாருங்கள்.. புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தில் பலி கொடுத்து பரிகாரம் செய்யச் சென்ற 70 வயது முதியவர் பலியாக, காயமின்றி உயிர் தப்பியது சேவல் ஒன்று.
பல்லாவரம் அருகே, புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தில், சேவலை பலி கொடுத்து பூஜை செய்ய வந்த பூசாரி, திறந்தவெளி மின் தூக்கியில் மூன்றாவது மாடிக்குச் சென்ற போது அங்கிருந்து தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பூசாரி பலியாக, பலியாகவிருந்த சேவல் காயமின்றி உயிர் பிழைத்தது.
இதையும் படிக்க.. மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கூலித் தொழிலாளியான ராஜேந்திரன், சுற்றிப் போடுதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்துள்ளார். கட்டடங்களில் சுற்றிப்போடுதல், வீடு மனை குடிபுகுதல் நிகழ்ச்சிகளின் போது செய்யப்படும் சடங்குகளையும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தாம்பரத்தில் மூன்று மாடி வீடு கட்டிய லோகேஷ், வெள்ளிக்கிழமை புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டு, இரவு சடங்குகளைச் செய்ய ராஜேந்திரனை அழைத்துள்ளார். புது வீட்டில் லிஃப்ட் வசதி வைக்க இடம் விட்டு இன்னமும் லிஃப்ட் வைக்காமல் இருந்துள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், மாடிப்படி வழியாக மூன்றாவது மாடிக்கு தனியாகச் சென்றுள்ளார். அவர் கீழே வருவார் என்று காத்திருந்த போது, லிஃப்ட் அமைக்க வைக்கப்பட்டிருந்த காலி இடத்தில் ராஜேந்திரன் கீழே வந்து விழுந்துள்ளார். அவருடன் கீழே விழுந்த சேவல் காயமின்றி தப்பித்து ஓட, படுகாயமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், காலியாக இருக்கும் இடத்தில் கோழியை அறுக்க ராஜேந்திரன் முயற்சித்த போது, கால் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராஜேந்திரன் தனியாக வசித்து வந்ததால், அவரது குடும்பத்தினர் பற்றியோ, அவரது சொந்த ஊர் பற்றியோ யாருக்கும் எந்த தகவலும் தெரியாததால், அவரைப் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.