ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீண்ட காலத்திற்கு குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்தவகையில், ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.