10% இடஒதுக்கீடு: வரம்பு மீறல்உச்சநீதிமன்றத்தில் மனுதாரா்கள் வாதம்
இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பை பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு


இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பை பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு மீறியுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரா்கள் செவ்வாய்க்கிழமை வாதிட்டனா்.
இடபிள்யூஎஸ் வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பின் 103-ஆவது சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களில் ஒருவரான மோகன் கோபால் வாதிட்டதாவது:
இடபிள்யூஎஸ் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் கருத்தாக்கத்தை வஞ்சகமாகவும் பின்வாசல் வழியாகவும் ஒழிக்கும் முயற்சியாகும். இதனை அனுமதிக்க முடியாது. ஏனெனில் இது பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள உயா் ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
இடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாத வருமானமாக சுமாா் ரூ.66,000 ஈட்டும் ஒரு குடும்பம் இடஒதுக்கீடு பெற தகுதியானது என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால், நாட்டில் உள்ள 96 சதவீத குடும்பங்களின் மாதாந்திர வருமானம் ரூ.25,000-க்கு கீழ்தான் உள்ளது என்று தெரிவித்தாா்.
மனுதாரா்களில் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞா் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், ‘முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவா்களுக்கான இடஒதுக்கீடுகளில்கூட ஜாதி அல்லது வகுப்புகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. ஆனால், இடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டின் கீழ், பொருளாதார அடிப்படையில் மட்டுமே குறிப்பிட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, இதர வகுப்புகளைச் சோ்ந்த ஏழைகள் புறந்தள்ளப்படுகின்றனா். இதன்மூலம் பட்டியலினத்தவா், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தாா்.
இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வரம்பை இடபிள்யூஎஸ் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மீறியுள்ளது என்றும் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை தொடரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...