சரப்ஜித் சிங் மனைவி சுக்பிரீத் கௌர் சாலை விபத்தில் பலி
டார்ன் டாரன்: லாகூர் சிறையில் கடந்த 2013ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பஞ்சாப்பைச் சேர்ந்த சரப்ஜித் சிங் மனைவி சுக்பிரீத் கௌர் சாலை விபத்தில் பலியானார்.
சரப்ஜித் சிங் மகள் சுவபன்தீன் கௌர் இது பற்றி கூறுகையில், தனதுதாய் சுக்பிரீத் கௌர், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஜலந்தர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவித்தார்.
இன்று சுக்பிரீத் கௌரின் இறுதிச் சடங்குகள் நடந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் பிகிவிண்ட் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித். இந்திய - பாகிஸ்தான் எல்லையருகே வாழ்ந்து வந்த சரப்ஜித் சிங், கடந்த 1991ஆம் ஆண்டு வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், லாகூர் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங், சக கைதிகளால் தாக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு மரணமடைந்தார்.