பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் இன்று இணைந்தார்.
50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.
ஆனால், தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பாஜக அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜுஜு, பாஜக தலைவர் சுனில் ஜாஹர், பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வினி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார்.
முன்னதாக அமரீந்தர் சிங், இன்று காலை தில்லியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்.