விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமையன்று 2% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து 7வது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் காரணமாக, விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இதைச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டதா?
தில்லியில், ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது ரூ.112.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூ.76.1 காசுகளாக இருந்த நிலையில், மார்ச் மாதம் லிட்டருக்கு ரூ.110.7 காசுகளாக அதிகரித்தது. அது இன்று ரூ.112.92 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விமான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான கட்டணத்தில் 40 சதவிகிதம் விமான எரிபொருளுக்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் விமான எரிபொருளின் விலை விமானப்போக்குவரத்தின் வருவாயை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.