ஜெய்ப்பூர்: எரிபொருள் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.123-க்கு விற்பனையாகிறது.
இதன் மூலம், நாட்டிலேயே பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும் இடமாக இது அமைந்துள்ளது.
இதுபோன்ற கடுமையான விலையேற்றம் காரணமாக, ஸ்ரீகங்காநகரில் உள்ள 80 சதவீத பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பகுதிகளைக் காட்டிலும் இங்கு கடும் விலை உயர்வு இருப்பதால் மக்கள் அனைவரும் அண்மையில் இருக்கும் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று விடுவதால், இந்த பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு குறைவான வாடிக்கையாளர்களே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ.105.31 ஆக உள்ளது. இதுவும் நாட்டிலேயே அதிக விலையாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படியிருக்க, அண்டை மாநிலமான பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.17 மற்றும் ரூ.11 குறைவாக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.