
புது தில்லி: நாட்டில் ஹரியாணா, உத்தரபிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரம் மற்றும் தில்லி ஆகிய 5 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரம் மற்றும் தில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
மத்திய சுகாதார செயலாளர்ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், ஹரியாணா, உத்தரபிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரம் மற்றும் தில்லி ஆகிய 5 மாநிலங்களில் ஐந்து மாநிலங்களிலும் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், "நோய்த்தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கரோனா தொற்று பாதிப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம்" என்று மத்திய சுகாதாரத்துறை அம்மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மக்கள் நெரிசலான இடங்களில் முகக் கவசங்களை அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கரோனா பரிசோதனை அதிகப்படுத்துதல், பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அனைவரும் தடுப்பூசிகளை விரைந்து எடுத்துக்கொள்ள வலியுறுத்தல் மற்றும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடந்து கடைபிடிக்குமாறு" அறிவுறுத்தியுள்ளது.
"அரசு கடுமையான கண்காணிப்பை கடைப்பிடிக்கவும், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதேனும் கவலைக்குரிய பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்" என்று ராஜேஷ் பூஷண் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கேரள கரோனா பாதிப்பு விவரம் மத்திய அரசிடம் தவறாமல் சமா்ப்பிக்கப்படுகிறது