‘வகுப்புவாதத்தை வளர்க்கும் மத்திய அரசு’: ஜஹாங்கீா்புரியில் புல்டோசரை மறித்த பிருந்தா காரத்
மத்திய அரசு வகுப்புவாதத்தை வளர்க்கும் வகையில் செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.
வடக்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 9 காவலர்களும், ஒரு குடிமகனும் காயமடைந்தனா். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 1,250 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | சோனியா காந்தி - பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை
இந்நிலையில், ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை காலை தொடங்கினர்.
வன்முறை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய மக்களின் குடியுருப்புகள் மட்டும் அதிகாரிகளால் திட்டமிட்டு இடிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், கட்டடங்களை இடித்த புல்டோசரை மறித்து அதிகாரிகளுடன் சமரசம் செய்தார்.
இதையும் படிக்க | தில்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தற்காலிக தடை
அதனைத் தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பேசிய பிருந்தா காரத், “மத்திய அரசு வகுப்புவாத சிந்தனையுடன் புல்டோசர் அரசியல் செய்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி அதிகாரிகள் கட்டடங்களை இடித்து வருகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
உடனடியாக அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு கட்டடங்கள் இடிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.