புது தில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதற்கு, புதிய ஒமைக்ரான வகை கரோனாவின் உருமாறிய வைரஸ் பரவி வருவது காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இதுவரை ஒமைக்ரானின் உருமாறிய 8 வகையான வைரஸ்கள் பரவி வருவதாகவும், அவற்றில், பிஏ.2.12 மற்றும் பிஏ.2.12.1 மற்றும் அதன் வேறுபட்ட வகையான பிஏ.2 - இது அமெரிக்காவில் பரவி வருகிறது - ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
தில்லியில் பதிவான கரோனா பாதிப்புகளின் மாதிரிகளை பரிசோதித்ததில் மேற்கண்ட வைரஸ்கள் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வகை உருமாறிய வைரஸ்களால்தான் தில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கரோனா பாதித்தவர்களின் மாதிரிகளை மரபணு வரிசை முறை பரிசோதனை செய்யப்பட்டதில் 97 சதவீதம் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ் பாதிப்பாகவும், 2 சதவீதம்மட்டுமே 2021ஆம் ஆண்டு பல உயிர்களை பலி கொண்ட டெல்டா வகை வைரஸாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதுவரை, தில்லியில் கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் லேசானது முதல் மிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 2,380 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோன நோயாளிகள் எண்ணிக்கை 13,433 ஆக அதிகரித்துள்ளது.