சீனர்களுக்கு சுற்றுலா விசா அளிப்பதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி கொண்டதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளது.
சீனப் பல்கலைக்கழகங்களில் படித்துவரும் கிட்டத்தட்ட 22,000 இந்திய மாணவர்கள், அங்கு திரும்பி சென்று படிக்க முடியாமல் தவித்துவருகின்றனர். சீனாவிற்கு செல்ல அனுமதி அளிக்கும்படி மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சீனா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆண்டு தொடக்கத்தில், பெருந்தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்திய மாணவர்கள் அங்கிருந்து தாய் நாட்டிற்கு திரும்பினர். இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்ரல் 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ - விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்லுபடியாகும் சுற்றுலா விசா இனி செல்லாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17ஆம் தேதி, வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதுகுறித்து விரிவாக பேசுகையில், "கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவருவதால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அனைவருக்கு ஏற்படைய நிலைபாட்டை எடுக்கும்படி பூடானை இந்தியா கேட்டு கொண்டுள்ளது" என்றார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசியது குறித்து விவரித்த பாக்சி, "இந்த விவகாரத்தில் சீனா ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது. சீனாவிற்கு வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், இந்திய மாணவர்கள் நாடு திரும்புவது குறித்து சீனத் தரப்பு இதுவரை எந்த ஒரு திட்டவட்டமான பதிலையும் அளிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க சீனத் தரப்பை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.