புதுதில்லி: பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக, நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கௌர், நாட்டில் எச்.ஐ.வி தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்(ஆர்டிஐ) கேட்டிருந்தார்.
இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நாடு முழுவதும் கடந்த பத்து ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, 2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 17,08,77 பேர் எச்ஐவி-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
அதிகபட்சமாக ஆந்திரம் மாநிலத்தில் 3,18,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,84,511, கர்நாடகத்தில் 2,12,982, தமிழ்நாட்டில் 1,16,536, உத்தரப் பிரதேசத்தில் 1,10,911, குஜராத்தில் 87,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் ரத்த தொடர்பு மூலமாக 15,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதித்த பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தொற்று பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 4,423 ஆக உள்ளது.
பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக, 2011-12ல் 2.4 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2020-21 இல் 85,268 ஆகக் குறைந்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எச்.ஐ.வி தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு, நாட்டில் 81,430 குழந்தைகள் உள்பட 23,18,737 பேர் எச்.ஐ.வி-யுடன் வாழ்ந்து வருகின்றனர்.
எச்.ஐ.வி தொற்றுக்கு பிரத்தியேகமான பயனளிக்கக்கூடிய மருத்துகள், சிகிச்சைகள் இல்லாத நிலையில், சரியான மருத்துவ கவனிப்பு மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கரோனா தொற்று பாதிப்பு, பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் எச்.ஐ.வி பாதிப்பு மிக குறைவாக உள்ளது.
தற்போது கரோனா தொற்று பரவல் நம்மைவிட்டு கடந்து வருவதால் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், எச்.ஐ.வி தொற்று குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.