இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலத்தையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இயல்புக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஓய்வுபெற்ற நரவனே; புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு
இந்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.
மேலும் மே மாதத்தில் சாதாரண அளவைக் காட்டிலும் அதிகபட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வடமேற்கு மாநிலங்களில் சராசரி மழை அளவைக் காட்டிலும் 89 சதவிகிதம் மழை அளவு குறைந்துள்ளதாகவும், இதுவே ஏப்ரல் மாதத்தில் 89 சதவிகிதமாக பதிவாகியுள்ளதையும் வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.