எனது ஆர்எஸ்எஸ், பாஜக நண்பர்களுக்கு பொய் பேசும் வியாதி இருப்பதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்தார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள திக்விஜய் சிங், தலிபான்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் எனக் கிடையாது. இந்த மாயை ஒரு கட்டுக்கதை. எனது பாஜக, ஆர்எஸ்எஸ் நண்பர்களுக்கு பொய் கூறும் வியாதி உள்ளது. பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் நான் ஆதரவு தெரிவித்தது இல்லை. எந்த நாடு அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்ட ஐய்மான் அல்-ஜவாஹிரியை, முக்கிய பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து, அமெரிக்கப் படைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.