தில்லியில் மூன்றாவது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தில்லியில் நேற்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொரு நபருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவரும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளம், ராஜஸ்தனில் மட்டும் குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நிலையில், தில்லியில் தற்போது 3 நபர்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தில்லியில் வசித்துவந்த நைஜீரியாவை சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. அவர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர் தில்லி அரசு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
தில்லியில் ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதி ஒருவருக்கு முதல்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.