ஒரே மாதத்தில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய மாநிலமாக பிகார் உருவெடுக்கும் என அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்துள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் பதவி மீது ஆசையில்லை; ஆனால்..: நிதீஷ் குமார் அதிரடி பதில்
இந்நிலையில் பிகாரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு கவனம் செலுத்த உள்ளதாக அம்மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசை அமைத்ததிலிருந்து வேலையின்மை பிரச்னை, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்திவருகிறோம். பாஜக ஆட்சிக் காலத்தில் இந்து-இஸ்லாமியர் என்றே கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது சமூகத்தில் வெறுப்பு விதைக்கப்பட்டு வந்தது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | செங்கோட்டையில் கத்தாடி பிடிப்பவர்களை நியமித்திருக்கும் காவல்துறை
நிதீஷ் குமார் உடனான கூட்டணி இயல்பாக நடந்ததாகக் குறிப்பிட்ட தேஜஸ்வி யாதவ் இதில் எந்த மறைமுக ஒப்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
“பாஜகவைப் போல் தலைவர்களை விலைக்கு வாங்கியோ, அவர்களை மிரட்டியோ அரசியல் செய்யப் போவதில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறோம். இதில் நாங்கள் மிகத்தீவிரமாக இருக்கிறோம். இன்னும் ஒருமாதத்தில் நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிய மாநிலங்களில் பிகார் இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.