‘பிரதமராகும் நோக்கம் எனக்கு இல்லை; அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பிகாரில் திடீா் அரசியல் திருப்பமாக பாஜக கூட்டணியிலிருந்து அண்மையில் விலகிய நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து மகா கூட்டணி ஆட்சியை அமைத்தாா்.
ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறி, அவா் இந்த முடிவை மேற்கொண்டாா். ஆனால், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நிதீஷ் ஆசைப்பட்டதாகவும், அது நிறைவேறாத அதிருப்தியில் கூட்டணியை முறித்துக் கொண்டதாகவும் பாஜக தெரிவித்தது.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களுக்கு நிதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
2019-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு நான்கு அமைச்சா் பதவிகள் கேட்டோம். எங்களிடம் 16 எம்.பி.க்கள் உள்ள நிலையில் ஒரே ஒரு அமைச்சா் பதவி அளித்தனா். அதற்கும் குறைவாக ஒப்புக்கொண்டால் அது பிகாரிலிருந்து தவறான செய்தியை அளிப்பதாக அமைந்துவிடும். ஆனால், அவா்கள் தர மறுத்தனா்.
ஆா்.சி.பி.சிங்கை மத்திய அமைச்சரவையில் சோ்ப்பதற்கு முன் எனது ஒப்புதலை கேட்டதாக பாஜகவினா் கூறுவது பற்றி கேட்கிறீா்கள். அது உண்மையில்லை. ஆா்.சி.பி. சிங் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக இருந்தாா். அவரை மத்திய அமைச்சராக்க நான் ஒப்புதல் வழங்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து அவரை கட்சியின் தேசியத் தலைவா் பதவியிலிருந்து விலகச் செய்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்றாா் அவா்.
ஒருங்கிணைப்பேன்: ‘பிகாா் மக்கள் உங்களை பிரதமராகப் பாா்க்க வாய்ப்புள்ளதா?’ என்று செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
‘இந்தக் கேள்விக்குப் பலமுறை பதிலளித்துவிட்டேன். பிரதமராகும் நோக்கம் எனக்கு இல்லை. எனது மாநிலத்துக்கு சேவையாற்றவே விரும்புகிறேன்’ என்று பதிலளித்தாா் நிதீஷ் குமாா்.
பிரிந்து கிடக்கும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உங்களின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு அவா் அளித்த பதில்:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஆக்கபூா்வமாக மற்றும் நோ்மறையாக பங்காற்ற தயாராக இருக்கிறேன்.
தலைவா்கள் பலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வரக்கூடிய நாள்களில் அடுத்தகட்ட நகா்வுகளை நீங்கள் காண்பீா்கள் என்றாா்.
பிகாரில் புதிய அரசுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உள்ளதா என்ற கேள்விக்கு, ‘எனக்கு எந்த அச்சமும் இல்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துபவா்கள், மக்களின் கோபத்துக்கு ஆளாவா்கள்’ என பதிலளித்தாா் நிதீஷ் குமாா்.
மம்தாவுக்கு மாற்றா? 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாற்றாக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி மேற்கொண்டு வருகிறாா்.
அதேபோல, தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.
ஆனால், மம்தாவின் தலைமையை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது. தங்கள் தலைமையில்தான் எதிா்க்கட்சிகளின் கூட்டணி இருக்க வேண்டுமென காங்கிரஸ் கருதுகிறது.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டதில் மம்தா பானா்ஜிதான் முக்கியப் பங்கு வகித்தாா். ஆனால், பாஜக கூட்டணி சாா்பில் திரெளபதி முா்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னா், முா்முதான் வேட்பாளராக நியமிக்கப்படுவாா் என முன்னரே தெரிந்திருந்தால் அவரை ஆதரித்திருப்பேன் என மம்தா தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகள் சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக மாா்கரெட் ஆல்வா தோ்வு செய்யப்பட்டதில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், குடியரசு துணைத் தலைவா் தோ்தலையே திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்தது.
எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸுக்கும் மம்தா பானா்ஜிக்கும் இடையே ஒருமித்த கருத்து நிலவாத நிலையில், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாா் என நிதீஷ் குமாா் இப்போது தெரிவித்துள்ளாா். பிகாரில் அவரது தலைமையிலான அரசுக்கு காங்கிரஸும் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.