எங்களை இழிவுபடுத்துவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி புதிய அரசை நிறுவியுள்ளது.
முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்ட நிலையில் 31 அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க | கைதாகிறாரா பிகார் அமைச்சர்? சரணடைய வேண்டிய நாளில் பதவியேற்பு
இதையடுத்து, பிகாரின் புதிய அரசு ஒரு 'காட்டு ராஜாங்கம்' என்று பாஜக விமர்சித்துள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள பிகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், 'எங்களை இழிவுபடுத்துவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை.
எங்கள் மாநில மக்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக நாங்கள் அறிவித்த நாளிலிருந்து அவர்கள் (பாஜக) அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பிகாரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம்' என்றார்.
பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர் கார்த்திகேய சிங்கிற்கு கடத்தல் வழக்கில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது குறித்து, ' வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம்' என்று பதில் அளித்தார்.