பிகார் மாநிலத்தின் புதிய சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங், கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நாளில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய அரசை நிறுவியுள்ளது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி.
முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது.
இதில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து 16 பேர், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 11 பேர், காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 பேர் என 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கார்த்திகேய சிங் மீது ஏற்கெனவே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தின் முன்பாக சரணடைய வேண்டும் என பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ல் கட்டட உரிமையாளர் ஒருவரை கொலை செய்ய அவரைக் கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி விசாரணையில், வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது' என்று பதில் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | பிகார் அமைச்சரவை விரிவாக்கம்: 31 அமைச்சர்கள் பதவியேற்பு