கரோனா தொற்று இன்னும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. சமீபமாக ஒரு சில பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 9,062 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 12,608 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,01,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், 'கரோனா இன்னும் இருக்கிறது. சமீப நாள்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்) செலுத்த வேண்டும்.
கரோனா இன்னும் இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் இறப்பு சதவிகிதம் 35% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 93,86,47,700 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவர்களில் 1,29,053,987 பேர் பூஸ்டர் டோஸ் போட்டுகொண்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 13 சதவீதம் ஆகும்.
இதையும் படிக்க | நாட்டில் ஒரே நாளில் 12.608 பேருக்கு தொற்று: 72 பேர் பலி