அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 5 முதல் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கினால் நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து புதிய அரசை நிறுவியுள்ளது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி.
முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்ட நிலையில் 31 அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
பிகாரில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும் அதனை நிறைவேற்றியபின்னர் மேலும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை சமஸ்திபூரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய கிஷோர், 'ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. பெவிகால் போல அவர் முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டுள்ளார். மற்ற கட்சிகளும் அவரைச் சுற்றியே சுழல்கின்றன.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பிகாரின் புதிய அரசு, 5 முதல் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கினால், நான் எனது ‘ஜன் சூரஜ் அபியான்’ பிரசாரத்தைத் திரும்பப் பெற்று நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவளிப்பேன்.
நான் பிகார் அரசியல் களத்தில் இறங்கி மூன்று மாதங்களே ஆகிறது, மாநிலத்தின் அரசியல் 180 டிகிரி திருப்பம் ஏற்றுபட்டுள்ளது. அடுத்த பேரவைத் தேர்தலில் மேலும் மாற்றங்கள் நிகழும்' என்றார்.