புதுதில்லி: 'இலவசங்கள் எல்லாம் ஒருபோதும் இலவசமாக வழங்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அதன் தாக்கத்தை தெரியப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அசீமா கோயல் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலவசங்கள் ஒருபோதும் ‘இலவசமாக’ வழங்கப்படவில்லை, அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதிகளை வழங்கும்போது, அவர்கள் தான் அதற்கான நிதியுதவி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மாறி மாறி இலவசங்களை அறிவிக்கும் போட்டி வெகுஜன மக்களின் ஈர்ப்பு வாக்குறுதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இதையும் படிக்கலாம் | பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
இலவசங்கள் உண்மையில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. அரசாங்கங்கள் இலவசங்களை வழங்கும்போது எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது, ஆனால், இது திறனை வளர்க்கும் பொது பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும். உதாரணமாக, மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது.
பஞ்சாப்பில் இலவச மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இதுபோன்ற இலவசங்கள் கண்ணுக்குத் தெரியாத பெரிய பாதிப்புகளை நாம் சுமக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட கோயல், அரசு அறிவிக்கும் இலவசங்களுக்கும் ஒரு விலை உள்ளது. பெரும்பாலான நிதிகள் இலவசங்களுக்கு செலவிடப்படுவதால் மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடுதாகவும், இதனால் ஏழைகளே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறினார்.
அதனால் "கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது, அதற்கான நிதியாதாரம் எங்கிருந்து வரும் என்பதை வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும். இதனால் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்" என்று கோயல் கூறினார்.
சமீப காலங்களாக தேர்தலில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் விவாதங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு உறுப்பினர் கோயலும் இலவசங்களால் மறைமுக செலவுகளும், ஆபத்துகளுமே அதிகம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பானிப்பட்டில் 2ஜி எத்னால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல், டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இலவதங்களால் நமது குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல்,
தன்னம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு பொருளாதார பேரழிவு என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததும், மாதத்தின் தொடக்கத்தில், தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் "பகுத்தறிவற்ற இலவசங்களை" ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு அமைப்பை அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அதற்கு இந்தியத் தோ்தல் ஆணையமும் உடன்பாடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.