பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால் கொடியவன் ஒருவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி, ஒரு மாத உயிர்ப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள். 7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டலுக்கும், ஒரு மாதமாக துடிதுடித்து இப்போது உயிரிழந்திருப்பதற்கும் காரணம், அந்த சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்தது தான்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கம் முக்கிய காரணமாகும். பாலியல் குற்றங்களை செய்தால் தண்டனை பெறாமல் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் நிலவுவது தான் குற்றங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணம் ஆகும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com