பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள சோகி பகுதியில் முதல்வர் நிதீஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்துச் சென்றன. அப்போது அந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதையும் படிக்க- அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைத் தீர்க்க பாஜகவில் மாற்றங்கள்
எனினும், இந்த சம்பவத்தின் போது, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் எந்த வாகனத்திலும் இல்லை எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தற்போது 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிகாரில் அண்மையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதீஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.