ஆத் ஆத்மி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதைக் கண்டித்து தில்லி பாஜகவினர் திங்கள்கிழமை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் அரிவிந்த் கேஜரிவால் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில்,
சிபிஐ பதிவு செய்த வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கேஜரிவால் நம்பர் ஒன் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவரை தனது அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றார். அரசு செலவில் மது மாபியாவை கொள்ளையடிக்க அனுமதித்த மொத்த ஊழலின் மன்னன் கேஜரிவால் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கேஜரிவால் அரசு செய்த ஊழல் மற்றும் கலால் ஊழல் பற்றி மக்களிடம் கூறுவதற்கு தில்லி பாஜக தொண்டர்கள் நகரம் முழுவதும் வீடு வீடாகச் செல்வார்கள் என்று குப்தா கூறினார்.
தில்லி அரசின் கலால் கொள்கை 2021-22ல் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிசோடியாவின் வீட்டில் சனிக்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது. ஆம் ஆத்மி அரசு விசாரணைக்கு எதிரானது அல்ல என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசு கேஜரிவாலை குறிவைப்பதற்கு எதிராக உள்ளது. மேலும் கொள்கையில் எந்த மோசடியும் இல்லை, அது வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனா கடந்த மாதம் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்ததை அடுத்து, கேஜரிவால் அரசு கலால் கொள்கையைத் திரும்பப் பெற்றது. கேஜரிவால் அரசாங்கமோ அல்லது ஆம் ஆத்மி கட்சியோ இந்த கொள்கையை ரத்து செய்ததற்கு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.