காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை முடிவு செய்ய வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற முடிவு வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அக்கட்சி உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார். தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தயாராக இல்லை என்றே தெரிகிறது. அவர் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி முடிவு செய்து கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.