
ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவில் திடீரென மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில்ல் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோனாலி போகாட் சமீபத்தில் தனது அலுவலக ஊழியர்களுடன் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். வடக்கு கோவா மாவட்டத்தின் அஞ்ஜுனாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சோனாலிக்கு திங்கள்கிழமை இரவு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படிக்க: கண் எரிச்சலா? கையாள்வது, தவிர்ப்பது எப்படி?
இதுகுறித்து சோனாலியின் சகோதரி ரூபேஷ் கூறுகையில்,
சோனாலி இறப்பதற்கு முந்தைய நாள் மாலை அவரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அவள் வாட்ஸ் ஆப்பில் பேச விரும்புவதாகச் சொன்னாள். பின்னர் தாயிடம் போகாட் பேசினாள், உணவு உண்ட பிறகு உடல் ஏதோ ஒருவித அசௌகரியத்தை உணர்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
சோனாலியின் மூத்த சகோதரர் ராமன், தனது சகோதரி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மாரடைப்பு வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
முறையான விசாரணையை நாங்கள் கோருகிறோம். அவள் மாரடைப்பால் இறந்ததை எங்கள் குடும்பம் ஏற்கத் தயாராக இல்லை. அவளுக்கு மருத்துவ ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்று ராமன் கூறினார்.
படிக்க: ‘ரியல்மீ 9ஐ 5ஜி' ஸ்மார்ட்ஃபோன் விற்பனை துவக்கம்: என்னென்ன அம்சங்கள்?
மேலும், சோனாலி உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் சில படங்கள் மற்றும் விடியோக்களை பதிவு செய்துள்ளார்.
கோவா மருத்துவமனையால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், கோவா காவல்துறை ஆகஸ்ட் 23 அன்று இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், சோனாலியின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், தொடர்ந்து காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சோனாலிக்கு 15 வயது மகள் யசோதரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.