பாஜகவினரின் கோரிக்கையை ஒரு எம்எல்ஏ கூட ஏற்காதது மகிழ்ச்சியாக இருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி ஆம் ஆத்மி எம்எல்எக்களிம் பாஜக பேரம் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இதுகுறித்து குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், கேஜரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், 'எங்களது ஒரு எம்எல்ஏ கூட இவர்களின் கோரிக்கையை ஏற்காதது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களாகிய நீங்கள், நேர்மையான கட்சிக்கு வாக்களித்துள்ளீர்கள். நாங்கள் இறப்போமே தவிர, நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கமாட்டோம் என்பதை தில்லி மக்களிடம் கூற விரும்புகிறேன்.
மணீஷ் சிசோடியா போன்ற ஒருவர் என்னுடன் இருப்பதற்கு நான் எனது முந்தைய வாழ்க்கையில் நல்லவற்றைச் செய்திருக்க வேண்டும். பாஜகவினரின் வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார். இப்போது அவர்கள் (பாஜக) எங்கள் எம்எல்ஏக்கள் அவர்கள் கட்சியில் சேர பணம் வழங்க முற்படுகிறார்கள். ஆம் ஆத்மியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர பாஜக தலா 20 கோடி ரூபாய் வழங்குவதாக அவர்கள் கூறியுள்ளனர்' என்றார்.
இதையும் படிக்க | கேஜரிவால் கூட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை: காரணம் என்ன?