
தில்லி உயர்நீதிமன்றம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தில்லி உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 14-இல் அறிவித்தது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளிலும் சோ்க்கை பெறுவா். விதிவிலக்காக நிகழாண்டு மட்டும் வயது வரம்பு 23-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததும் 25 சதவீதம் பேருக்கு மேலும் 15 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். 75 சதவீதம் பேரின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிடும். இந்தத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதையும் படிக்க | பெகாஸஸ் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திலும், மாநில உயா்நீதிமன்றங்களிலும் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு அனைத்து வழக்குகளையும் தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த மனுக்களை இன்று விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மூலம் 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.