நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கைக் கிழித்திருப்பேன் என பாஜக குறித்து மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கொல்கத்தாவில் தனது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'எனக்கு எதிராகவும், கொல்கத்தா மேயர் மற்றும் மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராகவும் தீங்கிழைக்கும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பாஜக அனைவரையும் திருடர்கள் என்று முத்திரை குத்துகிறது. திரிணமூலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள் போலவும் பாஜகவும் அதன் தலைவர்களும் புனிதமானவர்கள் போலவும் பிரசாரம் செய்கின்றனர். நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கைக் கிழித்திருப்பேன்.
இந்தியா முழுவதும் காவி கட்சி அல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அகற்ற பாஜக, தான் 'தவறாக சம்பாதித்த பணத்துடன்' அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அகற்ற பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து கிடைக்கின்றன என பாஜக பதில் அளிக்க வேண்டும்.
ஏனெனில் அந்த கட்சி, ஹவாலா மூலம் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம்.
அமைச்சர் ஹக்கீம் அண்மையில் மத்தியப் புலனாய்வு அதிகாரிகளால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்படலாம். அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால், அவரை துன்புறுத்துவதற்காக போடப்பட்ட ஒரு போலி வழக்கு என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்' என்று பேசினார்.
மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அனுப்ரதா மோண்டல் ஆகியோர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்துப் பேசிய அவர், உங்களால் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | தீபாவளி முதல் 5ஜி சேவை! முகேஷ் அம்பானி அறிவிப்பு