நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இது தொடர்பாக பேசிய முகேஷ் அம்பானி, தீபாவளி பண்டிகை முதல் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 4 நகரங்களில் வழங்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை அதிவேக இணைய பயன்பாட்டின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.