புது தில்லி: கொலை வழக்கில் கைதாகி, காவல்துறையினரின் பல அடுக்கு விசாரணைகளின்போதும் மிக அமைதியாக இருக்க உதவியது எது என்பது குறித்து குற்றவாளி அஃப்தாப் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
ஷ்ரத்தா கொலை வழக்கில், முக்கிய தடயமான ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைத் தேடிவரும் காவல்துறையினருக்கு, இந்த கொலை வழக்கு முழுக்க முழுக்க ஒரு சவாலாக மாறிவிட்டது.
உடல் பாகங்கள் கிடைக்கவில்லை, அவரைக் கொன்ற இடத்தில் தடயங்கள் இல்லை. குற்றவாளியிடம் எந்த சலனமும் இல்லை. இப்படி இல்லைகள் பல இருந்து கொண்டே இருக்கும் நிலையில், அஃப்தாப்பின் இந்த பேரமைதிதான் ஊடகங்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஷ்ரத்தாவைக் கொலை செய்த ஒரு மணி நேரத்தில் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருக்கிறார் அஃப்தாப். கொலை செய்த நேரத்தில தாகத்தைக் கூட உணர முடியாது என்று காவல்துறையினர் கருதி வந்த நிலையில், ஒரே மணி நேரத்தில் சாப்பிட உணவு வாங்கியிருப்பது அதிர்ச்சியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சரி.. இவ்வளவு அமைதி எப்படி கைவந்த கலையானது? காவல்துறையினர் கூறுவது என்னவென்றால், ஷ்ரத்தாவைக் கொலை செய்த அஃப்தாப், இதுபோன்ற கொலை வழக்குகளைச் செய்தவர்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று தொடர்ந்து கவனித்துள்ளார்.
மிகப் பிரபலமானவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும்போது எப்படி நடந்து கொண்டார்கள், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள் ஒன்று முதல் இணையத்தில் தேடி தேடிப் பார்த்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் சிக்கியவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அதனை பயிற்சியாக செய்ததால்தான், இவ்வளவு கடுமையான விசாரணைகளின்போதும் தான் அமைதியாக இருக்க உதவியதாக அஃப்தாப் ஒப்புக் கொண்டதாகவும் காவலர்கள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல, கொலை மற்றும் கொலையை மறைப்பது என பல்வேறு ஆழமான விஷயங்களையும் அங்குலம் அங்குலமாக அஃப்தாப் இணையத்தில் தேடி தேடிப் படித்துள்ளார்.
மிகவும் அழுத்தமாக இருக்கும்போது மக்கள் நடந்து கொள்ளும் விதம் என்பது பற்றியும் அவர் இணையதளத்தில் தேடியிருப்பதாக ஹிஸ்டரி காட்டுகிறது.
போலிகிராஃப் சோதனையின்போது கூட, அவர் அமைதியாகவே இருந்ததாகவும், அவரது முகத்தில் எந்த சோகமும் பதற்றமும் காணப்படவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திகார் சிறைத் துறை அதிகாரிகளும், மற்ற கொலைக் குற்றவாளிகள் போல் அல்லாமல், அஃப்தாப் இரவில் மிக நிம்மதியாக உறங்குவதாகவும், கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, மற்றவர்களைப் போல, சிறைக் கைதிகளுடன் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அஃப்தாப், கொலை செய்த பிறகு ஷ்ரத்தாவின் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடயங்களை அழிக்க, தில்லியிலிருந்து மும்பை சென்று வந்திருக்கலாம் என்றும் வழக்கம் போல பேருந்து அல்லது ரயிலில் செல்லாமல், மிக விரைவாகச் சென்று வர விமானத்தில் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.