
பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுமுதல் டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில், 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்கால தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பேசியதாவது:
குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாம் மீண்டும் கூடியிருக்கிறோம்.
இதையும் படிக்க | முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக பங்கேற்கும் ஜகதீப் தன்கர்!
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியுள்ளது. ஜி-20 தலைமை மூலம் உலகிற்கு இந்தியாவின் திறனை காட்டும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.