பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது. அடுத்த முறை நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் விடியோ மூலம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் ஆம் ஆத்மி தடம் பதிக்க உதவிய மக்களுக்கு நன்றி. குஜராத்தில் நாங்கள் அதிக தொகுதிகளில் வெல்ல முடியவில்லை. இருந்தபோதிலும் குஜராத்தில் கிடைத்த வாக்குகள் மூலம் ஆம் ஆத்மி தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதற்காக குஜராத் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வெகு சில கட்சிகளே தேசிய கட்சி என்ற அங்கீகாரத்துடன் உள்ளன. அந்தப் பட்டியலில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கட்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள்தான் ஆகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தோ்தலில் நிச்சயமாக குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தோ்தல் பிரசாரத்தின்போது எங்கள் கட்சியினா் எந்த விதமான அவதூறு கருத்துகளையும் பேசவில்லை. நாங்கள் நல்ல கருத்துகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சென்றோம் என்று கூறியுள்ளாா்.