நாட்டில் உழைப்பாளர் விகிதம் 5.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 2017-18 ஆண்டில் 46.8 சதவிகிதமாக இருந்த உழைப்பாளர் விகிதம் 2020-21ஆம் ஆண்டில் 52.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் உழைப்பாளர் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாகவும், வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளி விவரங்கள் துறை வெளியிட்டுள்ள உழைக்கும் தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின்படி 2017-18ஆம் ஆண்டில் உழைப்பாளர் விகிதம் 46.8 சதவிகிதமாகவும், வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவிகிதமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ஆம் ஆண்டில் 47.3 சதவிகிதமாக இருந்த உழைப்பாளர் விகிதம் அதிகரித்து 2019-20ஆம் ஆண்டில் 50.9 சதவிகிதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 52.6 சதவிகிதமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல் 2018-19ஆம் ஆண்டில் 5.8 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் படிப்படியாகக் குறைந்து 2019-20ஆம் ஆண்டில் 4.8 சதவிகிதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 4.2 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.