தில்லியில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான 17 வயது சிறுமி தற்போது சுயநினைவுடன் இருப்பதாக சப்தர்ஜங் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று மேற்கு தில்லியில் பள்ளிக்குச் சென்ற சில நிமிடங்களில் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மாணவி பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆசிட் விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட போதிலும் சந்தையில் தொடர்ந்து கிடைப்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சிறுமி தற்போது சுயநினைவுடன் இருக்கின்றார். ஆனால், முகத்தில் 8 சதவீத தீக்காயங்களுடன் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால் (19), வீரேந்தர் சிங் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அமிலம் ஆன்லைன் மூலம் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அரோராவும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நண்பர்கள் என்பது தெரியவந்தது.