ஷாஜஹான்பூரில் கூட்டமான ரயிலொன்றில், பயணியிடமிருந்து செல்லிடபேசியை திருடிய நபரை, பயணி அடித்து உதைத்து, ரயிலிலிருந்து வீசியதில், அந்த நபர் மரணம் அடைந்தார்.
தில்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் செல்லிடபேசியை திருடியுள்ளார். தனது செல்லிடபேசி காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்களிடம் செல்லிடபேசியை தேடியுள்ளனர். அப்போது, ஒரு இளைஞரிடம் அந்த செல்லிடப்பேசி இருந்ததையடுத்து, அங்கிருந்த பயணி, இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளார்.
இதில், தில்ஹார் ரயில் நிலையம் அருகே, ரயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இது தொடர்பாக, இளைஞரை ரயிலிலிருந்து தள்ளிய நரேந்திர துபே கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரை அடித்து உதைத்து, அவர் கெஞ்சி கேட்டும் ரயிலிருந்து தள்ளும் விடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ரயில் தண்டவாளத்திலிருந்து இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது அடையாளம் காணப்படவில்லை.