பிகாரில் கள்ளச்சாராய பலி சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பிகார் மாநிலத்தில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அந்த மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகின்றன. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் அதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவையும் பிகாருக்கு அனுப்பியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், 'ஏன் குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மனித உரிமை குழு செல்லவில்லை?' என்று கேள்வி எழுப்பியதுடன் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் மது அருந்தினால் உயிரிழக்கத்தான் நேரிடும் என்றும் முதல்வர் நிதீஷ் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.