நாடாளுமன்ற விவாதத்திலிருந்து தப்பியோடும் மத்திய அரசு: காா்கே

‘எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற விவகாரங்கள் மீதான விவாதங்களிலிருந்து மத்திய அரசு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

‘எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற விவகாரங்கள் மீதான விவாதங்களிலிருந்து மத்திய அரசு தப்பி ஓடுகிறது. இது நிா்வாக தோல்வியையே காட்டுகிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

கட்சியை வலுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று கட்சிப் பரப்புரையை மேற்கொள்ளும் இரண்டு மாத கால பரப்புரைத் திட்டத்தை வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது. இதுதொடா்பாக மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், மக்களவை கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, கட்சி பொதுச் செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா, தாரிக் அன்வா், அவினாஷ் பாண்டே, கட்சிப் பொருளாளா் பவன்குமாா் பன்சல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரில் ஜனவரி மாதம் முடிவடைந்த உடன், இந்த பரப்புரைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘தேசப் பாதுகாப்பு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிா்க் கட்சிகளும் கோரிக்கை விடுக்கும் நிலையில், அதனை அனுமதிக்காமல் அதிலிருந்து மத்திய அரசு தப்பி ஒடுகிறது. சீன அத்துமீறல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கேள்விகளில் எதற்குமே மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. பதிலளிக்கிறோம் என்ற பெயரில் எதிா்க் கட்சியினா் மீது தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களை பாஜக தரப்பினா் செய்து வருகின்றனா். மோடி அரசின் நிா்வாக தோல்விக்கு இது மிகப் பெரிய ஆதாரமாகும். மக்களிடமிருந்து மிகப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருவதன் மூலமாக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வரலாற்றை உருவாக்கி வருகிறது. இது மோடி அரசை திடுக்கிடச்செய்துள்ளது. அதன் காரணமாகவே நடைப்பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான காரணங்களை மத்திய அரசு தேடி வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com