புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும் என்று ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-ஆவது அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-ஆவது அமிர்தப் பெருவிழாவில் சனிக்கிழமை (டிச. 24) காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது, புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும். கல்வி உள்கட்டமைப்பு அல்லது புதிய கல்விக் கொள்கை எதுவாக இருந்தாலும், தனது அரசாங்கம் கல்வித் துறையை மிக வேகமாக மாற்றியமைத்து வருகிறது.
இதையும் படிக்க | சீனாவில் அதிர்ச்சி... ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு!
மேலும், முன்னோக்கு மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்வி முறையை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டால், இந்தியாவை அமிர்த காலத்தை நோக்கி வழிநடத்தும் சிறந்த குடிமக்கள் உருவாக்கப்படுவார்கள்.
கடந்த 75 ஆண்டுகளில், குருகுல கலாசாரம் மாணவர்களின் மனதில் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நல்ல எண்ணங்களையும் மதிப்புகளையும் புகுத்தியுள்ளது. ஒரு நாட்டின் அடையாளம் அதன் ராஜ்ஜியமாக இருந்த காலத்தில், இந்தியா அதன் குருகுலங்களுக்கு உலகளவில் புகழ் பெற்றது என்று கூறினார்.
பாலின சமத்துவம் என்றால் என்ன என்பதை உலகம் உணராத போது, இந்திய நாகரீகத்தில் கார்கி, மைத்ரேயி, ஆத்ரேயி போன்ற பெண் சிந்தனையாளர்கள் இருந்ததையும் மோடி நினைவுகூர்ந்தார்.
ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலம், குருதேவ் சாஸ்திரிஜி மகாராஜ் தர்மஜிவந்தஸ்ஜி சுவாமியால் ராஜ்கோட்டில் 1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வசதிகளை வழங்கி, உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கிளைகளை இந்த நிறுவனம் தற்போது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.