கர்நாடகத்தின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு டிசம்பர் 29 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் என்.சஷிகுமார் கூறுகையில்,
கடந்த 24ஆம் தேதி கடிப்பல்லாவில் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில்,
மங்களூருவில் உள்ள சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய இடங்களில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 6 மணி முதல் டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடையை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தடை உத்தரவு மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 29ஆம் தேதி காலை 6.00 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 29ம் தேதி காலை 10.00 மணி வரை மது விற்பனைக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.