தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது போன்று இந்திய ரயில்வே இணையதளத்திலிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணைய தளம் கடந்த நவம்பா் 23 ஆம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. இந்த சைபர் தாக்குதலினால் நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் செயல்படவில்லை என எய்ம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சர்வர்கள் மீட்கப்பட்டதன் மூலம், வெளிநோயாளிள் பிரிவு (ஓபிடி) பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் இ-ஹாஸ்பிடல் அமைப்பு இணைய முறையில் கொண்டு வரப்பட்டன. இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறை சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய சர்வர்கள் சீனா மற்றும் ஹாங் காங்கை மையமாக வைத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எய்ம்ஸ் சர்வர் ஹேக் செய்யப்பட்டது போன்று இந்திய ரயில்வே துறையின் இணையதள பயனர் விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை ஷேடோஹேக்கர்கஸ் என அழைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் திருட்டில் பயணிகளின் பெயர், இணைய முகவரி, அலைபேசி எண், பாலினம், முகவரி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பணம் பத்தும் செய்யும்: உடன்பால் திரைவிமர்சனம்
அதேபோல் பயணிகளின் பயண விவரங்களின் ஸ்கீரின்ஷாட்டுகளை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள் இந்த விவரங்கள் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை படி எடுக்கப்பட்டுள்ள இந்த தகவல்கள் விரைவில் விற்பனையாகும் அபாயம் எழுந்துள்ளது. எனினும் இந்த தகவல் திருட்டை இதுவரை ரயில்வே துறை உறுதி செய்யவில்லை.
இந்திய ரயில்வே துறையில் இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு 90 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.