ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே, மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தவர், பயணிகளுக்கு அரசாங்கம் 55 சதவீத சலுகைகளை வழங்குவதால் இது சாத்தியமில்லை, இது தனியார் நிறுவனங்களுக்கு சாத்தியமில்லை என்று கூறினார்.
மேலும், அமதாபாத்-மும்பை புல்லட் ரயில் தொடர்பான திட்டங்கள், டிப்போ, நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துடன் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கும் அரசு இடைவிடாது செயல்பட்டு வருகிறது என்றார்.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் குறித்து வைஷ்ணவ் கூறுகையில், ரயில் நிலையம் நகர மையமாக மாற வேண்டும் என்பதும், ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் கிடைக்க வேண்டும் என்பதும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் 80 சதவீத இடங்களில் 5-ஜி அலைக்கற்றை சேவை ஏற்படுத்தப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.