கர்நாடகத்தில் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. குந்தாப்பூர் அரசுக் கல்லூரி மாணவிகள் இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
ஹிஜாப் அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்லூரியில் தனியறையில் அமரவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடுப்பி கூடுதல் எஸ்.பி. சித்தலிங்கப்பா, இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை என்றும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.