தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வருகிற மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி அரசியல் கட்சியினர், தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. முன்னதாக, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வாழ்க்கையின் விசாரணையில் வழக்கை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்க ஆளுநர் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
ஜனவரி மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்த நிலையில், மீண்டும் மார்ச் 9 ஆம் தேதிக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
விசாரணைப் பட்டியலில் இருந்து இந்த வழக்கு நீக்கப்டுவதாகக் கூறப்பட்ட நிலையில், வழக்கினை விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வருகிற மார்ச் மாதம் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வு உறுதியளித்தார்.