உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ரஷிய எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.
உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷியாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிக்க | அவசரப் பேச்சுவாா்த்தை:ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால், இங்கிருக்கும் இந்தியர்கள் குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பதற்றம் தனியும் வரை உக்ரனைக்கு அத்தியாவசிய பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உக்ரைன் படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்த நேட்டோ படைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.