பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. பஞ்சாப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் முதலில் அறிவித்திருந்தது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையடுத்து பேரவைத் தோ்தல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன.
மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது.
இதையும் படிக்க- வாக்களிக்கும் போது சுயபடம்: கான்பூர் மேயர் மீது வழக்கு பதிவு
பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐந்து மாநிலங்களிலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். 2024 (மக்களவை) தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு, அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும். பஞ்சாபில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வருவோம். எதிர்க்கட்சிகளுடனான சந்திரசேகர்ராவ் சந்திப்பு தேசிய ஜனநாயக கூட்டணியை பாதிக்காது என்றார்.