உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வாக்களித்ததை சுயபடம் எடுத்து வெளியிட்ட கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படிக்க- பரமத்திவேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்
இந்த நிலையில் ஹட்சன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே தான் வாக்களித்ததை சுயபடமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலானதோடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் இச்சம்பவம் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுயபடம் எடுத்து வெளியிட்ட கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வாக்குச் சாவடிக்குள் சுயபடம் எடுத்ததற்காக மற்றொரு பாஜக தலைவரும், கட்சியின் யுவ மோர்ச்சாவின் முன்னாள் நகரத் தலைவருமான நவாப் சிங் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.