காங்கிரஸ் இல்லாமல் 3வது அணி இல்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. பாஜக அல்லாத எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமா்சித்தும் எதிா்த்தும் வருகின்றனா்.
இந்நிலையில், தங்களுக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அந்த மாநில முதல்வா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மும்பைக்குச் சென்று அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையும் படிக்க- கர்நாடகத்தில் பஜ்ரங் தள் ஆர்வலர் படுகொலை: ஷிவமொகாவில் பரபரப்பு
மேலும் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாரையும் முதல்வா் சந்திரசேகா் ராவ் சந்தித்துப் பேசினாா். இந்த நிலையில் காங்கிரஸ் இல்லாமல் 3வது அணி இல்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, காங்கிரஸ் இல்லாமல் 3ஆவது அணியை உருவாக்க வேண்டும் என சிவசேனை ஒருபோதும் சொல்லவில்லை.
3ஆவது அணி பற்றி மம்தா பேசியபோதும்கூட அணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வேண்டும் என்று சிவசேனை தெரிவித்தது. 3ஆவது அணிக்காக அனைவரையும் வழிநடத்தி செல்லும் திறன் கே.சந்திரசேகர ராவிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.